இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.



