இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கீதியோன் சாருடன் Gideon Saar கலந்துரையாடியதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது ‘X’கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இந்தச் சந்திப்பின் போது இலங்கைப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும் என்றும், அதன் காரணமாகவே இஸ்ரேலில் உள்ள 29,000-இற்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராஜதந்திர ரீதியில் பிராந்திய அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அது குறித்த அவசரத் தேவை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அந்த ‘X’ பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



