மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகர் அவசர எச்சரிக்கை!

இலங்கையின்  கடல் எல்லை மற்றும்  சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும்  சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என  கடற்றொழில் மற்றும்  நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையின்  கடல் எல்லை மற்றும்  சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும்  சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. நாங்கள் எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இது எமது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த 6 நாட்களாக தேடப்பட்டனர். இந்நிலையில் இந்திய கரையோர பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

கடந்த பல நாட்களாக இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த மீனவர்களின் தற்போதைய நிலைமை என்ன? ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்? என்ற விடயங்கள் தெரியவந்த பின்னர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்போம் என்றார்.