இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்துப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும் எனவும், பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களைக் குறைக்கவும், பிராந்திய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

“ஒரு நாடாக இலங்கை சர்வதேச அமைதிக்காகச் செயற்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் அமைதியே எமது எதிர்பார்ப்பாகும். கூறப்பட்டதை விட அதிகமான விடயங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்கத் தலையிடுகிறோம். மேலதிக தகவல்களைப் பின்னர் அறிவிப்போம்.”

“நாம் சர்வதேசச் சாசனங்களுக்கு அமைவாக, உயிர்ச் சேதங்களைக் குறைக்கும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் பொறுப்புடன் செயற்படுகின்றோம். இன்று மாலை மேலதிக தகவல்களைக் கூற முடியும்.”

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழல் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இவ்வாறானதொரு நேரத்தில் பாராளுமன்றத்தையோ அல்லது ஊடகங்களையோ பயன்படுத்தி நகைச்சுவை செய்வதற்கோ, அரசியல் கோபங்களைத் தீர்த்துக்கொள்வதற்கோ, போலி அல்லது அரைகுறை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ இது நேரமல்ல. உலகளாவிய ரீதியில் இவ்வாறானதொரு சூழ்நிலை நிலவும் போது, ஒவ்வொரு அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதியும் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.”

“எமது கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையான தேசிய கடற்பரப்பு எமக்குச் சொந்தமானது. அந்த 12 முதல் 200 கடல் மைல்கள் வரை இருப்பது பிரத்தியேகப் பொருளாதார வலயம். இந்த வலயத்தில் சர்வதேச சட்டம் அமுலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அங்கு எமக்கு அதிகாரம் உள்ளது, இராணுவ நடவடிக்கைகளுக்கு அல்ல.”

“இந்தச் சம்பவம் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. இது தொடர்பில் நேற்று அதிகாலை 5.08 மணிக்கே கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்தது. தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் அல்ல, அப்பகுதியில் சடலங்கள் மிதக்கின்றன என்ற தகவலே முதலில் கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தாக்குதல் குறித்துத் தேடுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கமாக இருந்தது.”

“அதன்படி, அரசாங்கத்தின் தரப்பிலும், கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன. எங்களால் 32 பேரைக் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வர முடிந்தது. ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 87 பேரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.”

“எங்களிடம் உள்ள சடலங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தனியார்த் துறையிடம் இருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்னும் சில மணி நேரங்களில் கொழும்பில் இருந்து மேலதிகமாக இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.”