கிவுல் ஓயா திட்டம் குறித்த சர்ச்சை தொடர்கிறது…

மகாவலி அதிகாரசபை என்றால், மரணத்தை ஏற்படுத்துகின்ற வலி என்றே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது என்றும் மகாவலி அதிகாரசபையினை தமிழ்மக்கள் அவ்வாறே கருதுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம் உட்பட பாரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதன்மூலம் புவித்தட்டில் ஏற்படுகின்ற பாரத்தினாலேயே நிலதிர்வுகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “தற்போதுதான் இந்த கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கம் தருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டத்தால் பாதிக்கப்படப்போகின்ற மக்களை ஒருபோதும் மகாவலி அதிகாரசபை அழைத்து கலந்துரையாடவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்துமாறு கோரியிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து எம்மால் இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆரப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தகைய கோரிக்கைகள் மற்றும் ஆரப்பாட்டத்தின் மூலம் எழுந்த அழுத்தங்கள் காரணமாகவே இவ்வாறு மீண்டும் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது” என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த திட்டத்திற்காக அபகரிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விபரங்கள் மகாவலி அதிகாரசபையால் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கூழாங்குளம் வயல்காணிகள் 88ஏக்கர், வெடிவைத்தகல்லு 87ஏக்கர், வெடிவைத்த கல்லு கிராமம் 124ஏக்கர், ஈச்சங்குளம் வயல் 95ஏக்கர், கோவில் புளியங்குளம் 158ஏக்கர், காட்டுப்பூவரசங்குளம் 258ஏக்கர் உள்ளடங்கலாக மொத்தம் 910 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா திட்டம் தொடர்பான அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்த விடயங்கள் தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டிவுள்ளார். மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவிலையோ, வவுனியாவிலையோ ஒருதமிழ் மக்களுக்கும் மகாவலி அதிகாரசபை காணிகளை வழங்கவில்லை.
தமிழ் மக்களின் பூர்வீககாணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிகின்ற வேலைகளையே மகாவலி அதிகாரசபை மேற்கொண்டு வருகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.