தமிழ் மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹா திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார்.

இந்தநிலையில் நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக, கிராமிய மட்டத்தில் தமது அரசியல் குழுக்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.