மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வழிபாட்டு ஸ்தலங்களுக்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் (F. U. Wootler) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பண்டிகைக் காலத்தை பாதுகாப்பான முறையில் செலவிடுவதற்கு விசேட திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தநிலையில், அனைத்து தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகள், அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள அனைத்து மத ஸ்தலங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.

இதனையடுத்தே, அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.