நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பெருமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.







வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வியாழக்கிழமை (27) மாலை சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்தச் சூறாவளிக்கு ‘டித்வா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தீவிரமான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் விபத்துகள் காரணமாக இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 12,513 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 922 குடும்பங்களைச் சேர்ந்த 2443 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மொனராகலை,நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி 14 பேர் காணமடைந்துள்ள நிலையில், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் பல பகுதிகளில் தொடர்கின்றன. அத்துடன் வெள்ளநீர் மற்றும் பலத்த காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதியாக மாத்தளை – கம்மடுவவில் 578 மி.மீ. பதிவாகியுள்ளது. இது தற்போதைய மழைக்காலத்தில் பதிவான மிக உயர்ந்த மழைப் பொழிவாகும்.
அதிக அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகளை கட்டாயமாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் முன் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்ற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தேகத்திற்கிடமான ஒலி, பிளவுகள், நீர் ஓட்டத்தின் மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய முன் எச்சரிக்கை அறிகுறிகள்:
* நிலத்தில் புதிய பிளவுகள் தோன்றுதல்
* மரங்கள், தூண்கள் அல்லது கம்பங்கள் சாய்வு ஏற்படுதல்
* வீட்டின் சுவர்களில் பிளவுகள் அதிகரித்தல்
* தண்ணீர் ஓட்டம் திடீரென மாறுதல் அல்லது மண் கலந்த தண்ணீர் பெருகுதல்
* அடிக்கடி கேட்கும் இயல்பற்ற சத்தங்கள்
இந்த அறிகுறிகள் ஏதாவது ஒன்றைக் கண்டால் தாமதிக்காமல் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்.
“கடும் மழையால் ஏற்படக்கூடிய மண்சரிவுகள் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களில் இருந்து உயிர்களை காப்பாற்றுவோம்…”
அவசர தொலைபேசி அழைப்புகள் – 117
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எந்தவொரு அவசர நிலையிலும் இந்த இலக்கத்திற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.



