வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுவதாகவும் வழக்கமாகச் சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை நிலம் விடுவிப்பு என விளம்பரப்படுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பாதீட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு காணப்படுகின்றது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள், காணி உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள பின்பும் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஆனால், அதேநேரத்தில், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் போன்ற முக்கிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
முழு நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நாட்டில் உள்ள முதியோர் ஆகியோரின் தேவைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இன்றளவிலும் பிள்ளைகள் தற்காலிக கூடங்களில் கல்வி கற்கின்றனர். பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் கல்விக்குக் குறைந்தது 6 வீத நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தற்போது இன்று அவரே ஆட்சியில் இருந்தாலும் கல்வித்துறைக்கான நிதி பாதுகாப்புத்துறையுடன் ஒப்பிடும் வகையில் இல்லை. இது ஆட்சியின் முன்னுரிமைகளில் ஒரு முரண்பாடாகும் என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுகின்றது. வடக்கு மாகாணத்தில் நிலம் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறுவது தவறானது. அரசு வழக்கமாக சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை “நிலம் விடுவிப்பு” என விளம்பரப்படுத்துகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. 2005ஆம் ஆண்டு திருகோணமலையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் மக்களால் மற்றும் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அதே கேள்வி இன்னும் தீர்க்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நில உரிமைகள் தொடர்ந்து எதிர்மறை நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



