பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்றன.
இந்தக் குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.
அத்துடன், இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டமை தொடர்பில் வவுனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், ஆனந்தனிடம் வழங்கிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் குறித்த வர்த்தகர் எவ்வித தகவல்களையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இஷாரா செவ்வந்திக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 07 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 03 பேரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



