சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அதே பிராந்தியத்தில், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 720 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்மேற்கு மற்றும் அண்மைய மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் புயலாக மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர், இது வடமேற்கு நோக்கி நகர்ந்து செவ்வாய்கிழமைக்குள்  தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்கள்

இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 17ஆம் திகதி முதல் நாட்டின் பல மாவட்டங்களிலும் கடும் காற்றுடனான மழை பெய்து வருகிறது. இதனால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பதுளை, மொனராகலை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் 7944 குடும்பங்களைச் சேர்ந்த 31 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 847 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்தோடு 132 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேர் 4 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பில் சீதாவாக்கை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்துக்கும், காலியில் யக்கலமுல்ல, நெலுவ, நாகொட, பத்தேகம, எல்பிட்டிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், களுத்துறையில் ஹொரண, வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், கண்டியில் உடுநுவர, தொலுவ, பஹததும்பர, பஸ்பாகே கோரள, கங்கா இஹல கோரள, பஹதஹேவாஹெட்ட, உடபலாத்த, தெல்தோட்டை, உடதும்பர மற்றும் யட்டிநுவர பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளது.

அதேவேளை கேகாலையில் ருவன்வெல்ல, வரகாப்பொல, கலிகமுவ மற்றும் பலாத்கொஹூபிட்டி, யட்டியாந்தோட்டை, ரம்புக்கன, மாவனெல்ல, அரநாயக்க, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், குருணாகலில் நாரம்மல, ரதீகம, அலவ்வ மற்றும் மல்லவபிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் , மாத்தளையில் ரத்தோட்டை, அம்பன்கங்க கோரள, ஹட்டவத்த, லக்கல, பல்லேபொல, உக்குவெல மற்றும் நாவுல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளது.

இதேபோன்று மாத்தறையில் வெலிபிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், நுவரெலியாவில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, நோர்வூட் மற்றும் வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், இரத்தினபுரியில் இம்புல்பே, பெல்மடுல்ல, கிரியெல்ல, அயகம, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கான எச்சரிக்கை

ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடி தொழிலாளர்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடலில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 55 – 65 கி.மீ வரை அதிகரித்து, சில நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், அந்தக் கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.