கொழும்பில் தொடரும் கனமழையால் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி!

தொடர்ந்து  பெய்து வரும் மழை காரணமாக  கொழும்பு நகர  சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும்  போக்குவரத்து  காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கைக்கு கிழக்காக விரிவடைந்து வரும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, சில மணி  நேரத்தில் குறைவடையும்  சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இன்று பிற்பகல் மழை  இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கொழும்பில் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையும் கடும் மழை பெய்துள்ளது.

இந்த மழையினால் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை குறைவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதுடன், பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.