இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை. இவ்விடயம் குறித்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். இவ்வாறான கைதுகளை தடுக்க நீதியமைச்சுடன் கலந்துரையாடுவோம். தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசில அவதாரங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சபையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டன.யுத்தகாலத்தில் தான் இவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச் சென்றுள்ளாளர்கள். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள்.
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.110000 இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன் பாராளுமன்றத்துக்கு பிரேரணையொன்றை கொண்டு வந்தோம்.ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள்.இதன் பின்னரே அந்த 28500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 6000 பேர் வரையிலானோர் இலங்கைக்கு வந்து மீள்குடியேறியுள்ளார்கள்..இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன். கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுடன் சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல,அவ்வாறு கைது செய்வது தவறு .நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.
ஏதாவது ஒரு விடயத்தை பிடித்துக் கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசுவதை ஒரு தரப்பினர் தற்போது பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.வடக்கிலும் தெற்கிலும் இனவாதிகள் தற்போது அநாதையாகியுள்ளார்கள்.தமிழ் அகதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒருசிலர் பல்வேறு வகையில் செயற்படுகிறார்கள். ராஜபக்ஷர்களின் அவதாரமாகவே இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதத்துடன் செயற்படுகிறார்கள்.
இந்தியாவில் அகதிகளாக இருந்த ராமசாமி தேவராஜா, தேவராஜா புஷ்பராணி ஆகிய இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்..இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் உள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(1)பி அத்தியாயத்தின் 34 ஆவது பிரிவின் பொது காரணிகளுக்கு அமைவாகவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டுக்கு வரும் அகதிகள் இவ்வாறு கைது செய்யப்படுவது கவலைக்குரியது.இருப்பினும் அதற்கு ஏதேனும் சட்ட காரணிகள் இருக்கும் .இந்த சட்ட விடயங்களை திருத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் சட்ட திருத்தத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்.முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம். இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை.கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமுடன் அமைச்சு மட்டத்தில் பேசுவோம்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அவர்களை இலங்கை பிரஜைகளாக்க உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.அதிகாரிகள் இழைக்கும் தவறை இனவாதம் என்று குறிப்பிட வேண்டாம்.தமிழர்கள் என்பதால் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் பதவி கனவுடன் இருப்பவர்கள் குறிப்பிடலாம்,ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு குறிப்பிடுவது அழகல்ல, குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுங்கள் அதனை விடுத்து இனவாத செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் என்றார்.