வட மாகாணத்தில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் கல்வியின் நிலைமை, பாடசாலைகளின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன, என்பது தொடர்பாக குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை என்று அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேவேளை, இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியுள்ளது. இதனால் வறுமையுடன் இணைந்து கல்வி தொடர்பான பிரச்சினையை அணுக வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.