இலங்கையில் சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
‘நீதியை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்க, அவர்களுக்கு பொதுச் சட்டம் பற்றிய அறிவும் புரிதலும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைச் சட்டம் குறித்த புரிதல் இல்லாததால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கு எடுத்துச் செல்வது என்று தெரியத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார சிக்கல்கள் மற்றும் மொழிப் பிரச்சினைகளும் நீதியைப் பெறுவதற்கான முக்கிய தடைகளாக இருக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில், சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவது நமது முதன்மைப் பொறுப்பு என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் சேவைகளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அடிப்படை சட்டம் பற்றிய அறிவு இல்லாதது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களுக்கும், ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.