கறுப்பு ஜூலை அவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி மனித புதைகுழி மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கை அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன், வடக்கு கிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.