இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெளிநடப்பு

கறுப்பு ஜூலை வாரத்தில் இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையில் இருந்து உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) ஆரம்பமானது.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லோகப்பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.

தமது இனமானது அழிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை கலவரமாகும். அதன் பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தினர்.
இந்தநிலையில் செம்மணி புதைகுழியில் பிஞ்சு குழந்தைகள் உட்பட இளைஞர்கள் யுவதிகள் என பலர் புதைக்கப்பட்டமைக்கு அடிப்படை காரணமே இந்த ஜூலை கலவரமாகும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஜூலை கலவரத்திற்கு தீர்வு இதுவரை வழங்கப்படாமையை கண்டித்தே தாம்; சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அவர் சபையில் இருந்து வெளியேறினார்.