பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் மாற்றப்படும் வரை அதை நடைமுறைபடுத்துவதற்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வினவியுள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், பிற மேற்கத்திய சக்திகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி வருகிறது.

புதிய சட்டம்

இது ஒரு கடுமையான சட்டம் என்று ஐரோப்பிய ஒன்றியம் மேற்கோள் காட்டி வருகிறது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசாங்கத்துடனான அண்மைய சந்திப்புகளில், தடைச் சட்டம் குறித்தும் விசாரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வசதியைப் பெற இலங்கை பிடிஏ என்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது ஒரு முன்நிபந்தனையாகும்.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்காலம் குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று கேட்டதற்கு, அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.