உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு

இலங்கையில்  உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளது.

2019ஆம் ஆணடு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்காவர்கள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தத் தாக்குலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 8.45 மணிக்கு அனைத்து மதத் தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு கொட்டாஞசேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் ஆரம்பமாகி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தைச் சென்றடையவுள்ளது. காலை 8.30 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அதேவேளை கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.