உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட 53 நீதிப்பேராணை மனுக்களும் 6 அடிப்படை உரிமைகள் மனுக்களும் உயர்நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் தொடர்பான நீண்ட விசாரணைகளின் பின்னர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் குறித்த மனுக்களை நிராகரித்துள்ளது. குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று (04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சமாதான நீதவானின் சான்றுப்படுத்துதல் தொடர்பான பிரச்சினை, சத்திய கடிதப் பிரச்சினை போன்ற காரணங்களால் 37 வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி, நீதியரசர் மொஹமட் லஃபார் தாஹீர் தீர்ப்பை அறிவித்தார்.
அதற்கமைய அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் பிறப்புச் சான்றிதழின் நகல் பிரதிகளை சமர்ப்பித்தமைக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் நிராகரித்துள்ளது.



