இலங்கை தமிழரசு கட்சியின் முடிவை விமர்சித்துள்ள சிறிதரன்

‘புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

‘மாறாக அனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  புதிய அரசியலமைப்பு உருவாக்கல் விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு கடிதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

‘எனினும் அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் தற்போது ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை அனுப்பிருந்தார்.

இருப்பினும் இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், ‘அரசாங்கம் எமக்கான தீர்வுத் திட்டத்தைத் தருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

‘இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம்’. ‘பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்’?  ‘உணவை வைத்திருப்பவன், பசியுடன் இருப்பவனைப் பார்த்து உனக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்கப்போவதில்லை’. ‘எனவே எம்முடைய பசிக்குரிய உணவு எதுவென்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

‘சுமார் 80 வருடங்களாக தமிழர்களாகிய நாம் உரிமைப்பசியுடன் வாழ்கிறோம்’.  ‘அந்த உரிமைப்பசிக்காக நாம் செய்த தியாகங்கள் அளப்பரியவை’. ‘அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம்’.
‘இந்த விடயத்தில் தமிழரசு கட்சியாகிய நாம் மாத்திரமன்றி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல கட்சிகளும் இணைந்து ஒரு பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டும்’ என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.