வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரை பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலைப்படுமாறு உத்தரவு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸின் வீட்டிற்கு கடந்த 9/11/2019 அன்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அழைப்பாணையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினம், தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் ஆகியவற்றில் கலந்து கொண்டமை தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்தார்.

மேலும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் நினைவு தினங்களில் கலந்துகொண்டமை தொடர்பில் தொடர்ச்சியாக விசாணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.