நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 193 குடும்பங்களை சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 98 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் மூன்று தற்காலிக இடைதங்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்றும் (27) தொடர்ச்சியாக அதிக மழை பெய்து வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களுக்கும் தேவையான தற்காலிக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திறட்டி வருவதோடு, அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.