இலங்கை- பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (28) கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தால் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான 45 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதனடிப்படையில் அவர்களை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருந்தபோதிலும் தப்பிச்சென்ற அவர்களை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் ஷேக் ஹசீனாவையும் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோர்களையும் உடனடியாக பங்களாதேஷுக்கு திருப்பியனுப்ப கோரியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இது விடயம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரொன்றையும் கையளித்தனர்.