பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடைப்படைச் சம்பளமாக 1,350 ரூபாவை நிர்ணயித்து இன்று அல்லது நாளை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணய சபை உறுப்பினர் கே.மாரிமுத்து தெரிவித்தார்.
அதற்கமைய வர்த்தமானி வெளியிடப்படும் தினத்தில் இருந்து குறித்த சம்பளம் வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணய சபை உறுப்பினர் கே.மாரிமுத்து மேலும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்கவும் ஊக்குவிப்பு திறன் கொடுப்பனவாக 350 ரூபாய் வழங்கப்படமாட்டாது என்றும் மாறாக மேலதிகமாக எடுக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்குவதற்கும் இன்றைய சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படும் என்பது மகிழ்ச்சியான செய்தியென இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சம்பள நிர்ணய சபை உறுப்பினர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதற்காக வேலைப்பழுவை அதிகரிக்க முடியாது என்றும் முதலாளிமார் சம்மேளனம் இது தொடர்பான வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



