உக்ரைனில் ஐந்து இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் தடுத்து வைப்பு

ரஷ்ய இராணுவத்திலுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் 5 பேர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் உக்ரைனில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கையர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன்  இராணுவங்களுடன் இணைந்து சண்டையிடுவது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, உக்ரைனில் அங்கீகாரம் பெற்ற துருக்கியிலுள்ள  இலங்கை தூதரகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன்  அதிகாரிகள் சனிக்கிழமை (10) இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உக்ரைன் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு கடந்த காலங்களில் மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது.

ரஷ்யாவிற்கு சென்ற இலங்கையர்கள் பெரும்பாலும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர். இவர்கள் ரஷ்ய குடியுரிமை, நல்ல சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தமையினால் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவர்கள்  ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளமையினால், அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளதோடு, சிலர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.