சர்வதேச உளநல தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.
மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம் என்னும் தலைப்பில் சர்வதேச உளநல தின நிகழ்வுகளின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் உளநலம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் மாபெரும் நடைபவனியொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு கோட்டைமுனை சந்தியில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த நடைபவனி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நடைபவனியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் ரி.கடம்பநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உளநல மேம்பாட்டுக்காக செயற்படும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டன.
இதன்போது காந்திபூங்காவில் விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விழிப்புணர்வு நாடகமும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.