லெபனானிலில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவம் – ஐ.நா. அதிரடி நடவடிக்கை

லெபனானில் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஐ.நா. ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதிலாக இந்தோனேஷிய இராணுவத்தினர் நிறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இதனால் லெபனானுக்கு செல்ல வேண்டிய சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு பிரிவின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நியூயோர்க்கில் ஐ.நா. பேச்சாளர் தெரிவிக்கையில், ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கையில் 25 வீதமான பங்களிப்பை சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கி வருவதாகவும், ஆனால் அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறினார். இந்த திரும்பப் பெறுதல் போர்க் குற்றச்சாட்டிற்குள்ளான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் விளைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஐ.நா.வின் இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக மறுத்து வருகின்றது.

இந்த நிலையில் மாலியில் அமைதி காப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் நிலை தொடர்பிலும் கொழும்பிலுள்ள இராணுவ வட்டாரங்கள் கவலையடைந்துள்ளன. இது அமைதி காக்கும் படையினருக்கு மிக மோசமான நிலையாக விளங்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரங்களின் தகவல்படி வேறு எந்த குழுவும் அந்த நாட்டில் பணிகளை மேற்கொள்ள தயாராக இல்லை என்று நம்புகின்றன. அதேவேளை தென்சூடானிலும் சிறிலங்கா இராணுவத்தினர் அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது.