25 சத வீதமான மருத்துவா்கள் நாட்டிலிருந்து வெளியேறத் தயாராகின்றாா்கள்

25 சதவீத மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் 1,800 மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நாட்டில் கொவிட் 19 மற்றும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்படுவதற்கு முன்னர் 200 மருத்துவர்களே வெளிநாடுகளுக்கு இடம்பெயரவிருக்கின்றனர் என சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களில் காணப்பட்டன. எனினும் தற்போது 25 சதவீதமான மருத்துவர்கள் வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கான தேர்வுகளில் சித்தியடைந்துள்ளனர் எனத் தரவுகள் காட்டுகின்றன.

இது எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார சேவையை மிகவும் பாதிக்கும். வைத்தியர்களுக்கான கொடுப்பனவு குறைந்தளவில் வழங்கப்படுவதே இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தை கருத்திற்கொண்டு வினைத்திறனுடன் செயற்பட்டால் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்களையும் நாட்டிற்கு மீள அழைக்க முடியும்” என்றார்.