1,412 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு

இலங்கை இராணுவம் அதன் 75ஆவது ஆண்டு நிறைவை (1949 – 2024) இன்று வியாழக்கிழமை (10) கொண்டாடுகின்றது.

இதனையிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இலங்கை இராணுவத்தின் (நிரந்தர மற்றும் தொண்டர்) படையணிகளைச் சேர்ந்த 139 அதிகாரிகள் மற்றும் 1,273 ஏனைய தரங்களில் உள்ளவர்கள் அடுத்த தர நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 131 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் (உபகரண பொறுப்பாளர்கள் உட்பட) மற்றும் 08 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின்) அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

அத்துடன், 99 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II, அதிகாரவாணையற்ற அதிகாரிகள் I நிலைக்கும், 185 பணிநிலை சார்ஜெண்ட்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II நிலைக்கும், 380 சார்ஜெண்ட்கள் பணிநிலை சார்ஜெண்ட் நிலைக்கும், 346 கோப்ரல்கள் சார்ஜெண்ட் நிலைக்கும், 111 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 152 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.