முஸ்லிம் சேவை நாடகங்களில் பங்கு கொள்கின்ற கலைஞர்களுக்கான பயிற்றுவிப்பு

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகங்களில் பங்கு கொள்கின்ற கலைஞர்களுக்கான  பயிற்றுவிப்பு செயலமர்வு நேற்று (13.11.2023)  இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன பயிற்சி மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
குறித்த பயிற்சி நெறியானது கதை வசனங்கள் பாத்திரங்களின் ஊடாக வானொலி நாடகத்தை வெளிக்கொனறல் என்ற தொணிப் பொருளில் மூன்று நாட்களைக் கொண்ட பயிற்சி நெறியாக நேற்று தொடக்கம் புதன்கிழமை வரை நடைபெற உள்ளது .
குறித்த பயிற்சி திட்டத்தில் 34 கலைஞர்கள் பங்கு பற்றுகின்றனர். பிரதான வளவாளராக கலாநிதி ரஸ்மின் அவர்கள் கலந்துகொள்கின்றார்.குறித்த பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்கின்ற களைஞர்களுக்கு தொடர்ச்சியாக முஸ்லிம் சேவை நாடகங்களில் பங்குகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் திருமதி பாத்திமா றினூசியா  தெரிவித்தார்.
குறித்த பயிற்சி திட்டத்திற்கான நிதி உதவியினை முஸ்லிம் சேவையின் ,பணிப்பாளர் திருமதி பாத்திமா றினூசியா மற்றும் சிரேஷ்ட  தயாரிப்பாளர் ஏ.எம்.எம்.ரலீம்  ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதற்கான (SCOPE) செயற்திட்டத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் ஃபெடரல் வெளியுறவு அலுவலகம் ஆகியவற்றால் நிதி உதவி அளிக்கப்படும் கூட்டு முயற்சியான SCOPE செயற்திட்டமானது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து சர்வதேச அபிவிருத்திறகான ஜேர்மன் நிறுனத்தினாலும் (GIZ) செயல்படுத்தும் செயற்திட்டமாகும்.
பயிற்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் SCOPE செயற்திட்டத்தின் கலை மற்றும் தொடர்பாடல் ஆலோசகரான ஏ.சீ.எம்.மாஹிர், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி லலணீ விக்கிரமராஜா, சிரேஷ்ட அறிவிப்பாளரும் கலைஞருமான திருமதி புர்க்கான் B இப்திஹார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.