10 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை: நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பமில ரத்நாயக்கவால் இன்று புதன்கிழமை (23.10.2024) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை அண்மித்த கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரில் 10 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 07 பேர் மீதும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலியை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகை சோதனைக்குட்படுத்திய போது 146 கிலோகிராம் பொருட்கள் அடங்கிய பொதியுடன் சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது பொதியிலிருந்து 48 கிலோ கிராம் ஹெரோயின் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.