வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் ஆய்வாளர் அலன் கீனன் ஆராய்ந்துள்ளார்.
வவுனியா – வெடுக்குநாறிமலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று சில தினங்கள் கடந்ததன் பின்னர், நாட்டில் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் கள நிலைவரம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை பகுதிகளுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டதாகவும், அங்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் விவகாரம் பற்றியும் அலன் கீனன், பரந்துபட்ட ரீதியில் ஆராய்ந்துள்ளார் என அறியவந்துள்ளது.