வவுனியாவில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ் விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள் , இரானுவ உயர் அதிகாரிகள் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் , வர்த்தக சங்கத்தினர் , முச்சக்கரவண்டி சங்கத்தினர் , சமயத்தலைவர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த கலந்துரையாடலில்,நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி கண்டி வீதி இரானுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதுடன் அத்தியாவசிய தேவையின்றி வவுனியா நகருக்குள் செல்வற்கு தடைவிதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அரச உத்தியோகத்தர்கள் மட்டும் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல் முடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.