வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேசசபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் தங்களது தரப்பு ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது தொடர்பில் சிறிய பிரச்சினை உள்ளது. சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை பேசி தீர்மானித்துக் கொள்வோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் தங்களது தரப்பு ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சிமன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடர வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.