வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றாவும் உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகியும் உப செயலாளராக செபஸ்டியாம் தேவியும் பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாக தெரிவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், ‘எமது சங்கம் 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை நேர்த்தியாக வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இயங்கி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு வருட காலமாக தனி நபர்களின் பிரச்சினைகளால் ஒருவர் பிரிந்து சென்று அதனை மழுங்கடிக்கும் நோக்கோடு செயற்படுகிறார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது அமைப்பாகவே இருக்கும். அதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம், அதன் அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் உரிமை கோரமுடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.