வடக்கு, தெற்கு மக்களின் அபிலாஷைகள் ஜனாதிபதிக்கு புரியவில்லை

வடக்கு, தெற்கு மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி செயற்படுகிறார். யுத்த வெற்றியின் போது ஜனாதிபதி செயற்பட்ட விதம் பல விடயங்களை உணர்த்தியுள்ளதென சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தற்போது சகல தரப்பினருடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. எமது தரப்பினருக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் எம்மீதும், ஏனைய  தரப்பினர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தீர்கள். இப்போது எவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருகின்றீர்கள்.

யுத்த வெற்றி விழாவின் போது ஜனாதிபதி நாடகம் அரங்கேற்றினார் என்றே குறிப்பிட வேண்டும். இராணுவத்தினரை படையினர் என்று எவ்வாறு குறிப்பிட முடியும்.

அவ்வாறு குறிப்பிடுவதாயின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இராணுவ வீரர் இல்லையா, அவரை  சிப்பாய் என்றா அழைப்பீர்கள். இராணுவத்தினருக்கு உரிய மரியாதை மற்றும் கௌரவத்தை வழங்குங்கள்.

வடக்கு மக்களின் அபிலாஷையையும், தெற்கு மக்களின் அபிலாஷைகளையும் ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை.

யுத்த வெற்றி தினத்தன்று ஜனாதிபதி செயற்பட்ட விதம் பல விடயங்களை உணர்த்துகிறது. கண்மூடித்தனமான மனநிலையில் இருந்து விடுப்பட்ட யதார்த்த நிலைக்கு அமைய செயற்படுங்கள்.  என்றார்.