வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாகாண அதிகாரம் அவசியம்: ஐக்கிய மக்கள் சக்தி கருத்து

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாகாணசபை முறைமை அவசியம். அதற்குரிய நிர்வாக அதிகாரம் வழங்கப்படவேண்டும். எனவே மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உபதலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையே நாம் விடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.