வடக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, Skavita Humanitarian Assistance and Relief (SHARP)இன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய மற்றும் Delvon Assistance for Social Harmony (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருடன் இணைந்து இன்று (22) கைச்சாத்திட்டார்.

இலங்கையின் வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் 1,007,194 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா. 300 மில்லியன்) வழங்கியுள்ளது.

2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு பிரதான நன்கொடையாளராக உள்ளதுடன், மொத்த உதவித் தொகை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து  SHARPஇன் பணிப்பாளர் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய கருத்து தெரிவிக்கையில்,

2016ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இன்று வரை SHARP மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக ஜப்பானிய தூதரகத்துக்கு SHARP மிகவும் நன்றியுள்ளதாகவும் ஆழ்ந்த பாராட்டுதலுடனும் உள்ளது.

2024 ஜூலை நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, SHARP மொத்தம் 2,846,650m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்து மற்றும் 11,889 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 169 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 4,666 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 57,773க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் 3,318க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளன.

SHARP நிறுவனத்தால் துப்புரவு செய்யப்பட்ட மொத்த நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜப்பானின் உதவியாகும். கண்ணியத்துடன், வினைத்திறனான வகையில் ஜப்பானிய தூதரகத்தின் முழு ஆதரவுடன் தமது செயற்பாடுகளை SHARP முன்னெடுக்கும். வழங்கப்படும் நிதிக்கு முழுமையாக பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தி, எமது அனுசரணையாளர்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவோம்.

SHARPஇன் அங்கத்தவர்களின் மனமார்ந்த நன்றியை ஜப்பானிய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கியமாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் ஜப்பானிய தூதரகத்தின் செயற்பாடுகளுக்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை காண்பிக்கின்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.

2024 ஆகஸ்ட் நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, DASH மொத்தம் 7,546,16m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றிவிடுவித்து மற்றும் 55,907 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 113 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 14,073 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 77,004க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 110,842 பேர் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.