ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்ப்பு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான்  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள் ஏற்படுத்தினார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்களை முழுமையாக ஆற்ற முடியாது.இருப்பினும்  குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் வெளிப்படுத்தி, அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்கள் சிறிதேனும் ஆறும்.

இந்த குற்றத்தின் பொறுப்புதாரிகள் பேசுவதும், அதற்கு சபையில் ஒருதரப்பினர் கரகோசம் எழுப்புவதும் கவலைக்குரியது. தமது ஆட்சியில் நடந்த தாக்குதலை மறந்து விட்டு இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பார்த்து விமர்சிப்பதும் கவலைக்குரியது. அரசியலுக்காக இவர்கள் இந்தளவுக்கு கீழ் நிலையில் சென்றிருப்பதையிட்டு  வெட்கடைய வேண்டும்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியாது.2015 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள்  தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள்  ஏற்படுத்தினார்கள்.இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது.

2015ஆம் ஆண்டு மக்களாணை பலமாக இருந்த காரணத்தால்   ராஜபக்சக்கள்  நோக்கம் உடனடியாக நிறைவேறவில்லை.   ராஜபக்சக்கள்  2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வு பிரிவு ஊடாக சிங்களம் – முஸ்லிம் இனவாதம் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பிரிவினரை உருவாக்கி அவர்களை தமது தேவைக்காக  பயன்படுத்தினார்கள்.

இந்த குழுக்கள் ஊடாகவே ராஜபக்சக்கள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள்.இதனால் இலங்கையில் வாழ முடியாது என்ற நிலைக்கு முஸ்லிம் சமூகத்தினர் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பிரிவுக்கு தள்ளப்பட்டார்கள். தவறான வழிகளுக்கும் செல்ல நேரிட்டது. இதன் பின்னரே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ராஜபக்சக்களை  மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.இந்த தாக்குதல்களை தடுத்திருக்கும். புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த அடிப்படைவாதம் தொடர்பில் உலமா சபை உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலமுறை எடுத்துரைத்தும் ரணில்,சஜித் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய  உண்மையை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்றார்.