முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு எதிராக ஜெனீவாவுக்கு கடிதம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார், 500 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு, தற்போது வேறு வழியில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பில் இதுவரையிலும் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சொத்து விபரங்களை வெளியிடாத 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவித்தல் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

உரிய காலத்தில் குறித்த மக்கள் பிரதிநிதிகள் சொத்து விபரங்களை வெளியிட தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.