சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் வைத்தியர் அத்தியட்சகர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மன்னார் மருத்துவமனைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.
இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கையில் விலங்கிடப்பட்ட நிலையில், மருத்துவர் அர்ச்சுனா இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, மருத்துவர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.