மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சில முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தெரிவித்தார். இதன்போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனித புதைகுழி பகுதியை இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
‘இதன் போது சில தீர்மானங்களுக்கு அவர்கள் முன்வந்தார்கள்’.
குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும், நிறம்பியுள்ள நீரை அகற்றுவதற்கும் நகர சபை இணங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும், குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என்று சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?,அது எங்கே இருக்கிறது போன்ற விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.