செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே என்ற சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, குறித்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இந்த அகழ்வினை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாக விபரித்துள்ளது.
எனினும், அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மினசோட்டா நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக செம்மணி மற்றும் மன்னார் போன்ற பிற இடங்களில் தோல்வியுற்ற விசாரணைகளை மேற்கோள்காட்டி, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயத்தை முறையாக விசாரிப்பதற்கு ஒரு தேசிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததையும் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் அரசியல்மயமாக்கல் மற்றும் பயனற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ள ஆணைக்குழு, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளது.