கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகர் பகுதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டு கிழக்கின் முக்கிய இயற்கை துறை முகத்தை கொண்டும் காணப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி என்ற போர்வையில் வேறு நாடுகளுக்கு திருகோணமலை துறை முகம் உட்பட பல இயற்கையான இடங்கள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் திருகோணமலையில் கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடை பெற்றுள்ளதுடன் நடந்தும் வருகிறது இது தவிர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க பல போராட்டங்கள் வடகிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் இடம் பெற்றன இதன் ஒரு கட்டம் திருகோணமலை நகரில் இடம் பெற்றது. அரிசி விலையை குறைக்க கோரி திருகோணமலை நகர சபைக்கு முன்னால் (09.04.2024) அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம் பெற்றது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டினி சாவு எமக்கு வேண்டாம், இலங்கை அரசாங்கம் அரிசி விலையை குறைக்க வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார சுமையில் இருந்து மக்களை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் பொருட்களுக்கான விலையை குறைக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இதனை புரிந்து மக்களுக்காக செயற்பட்டு விலைகளை குறைக்க முன்வர வேண்டும் வாக்குகளுக்காக மாத்திரம் மக்களிடம் வராமல் மக்கள் பிரச்சினைகளை பார்க்க வேண்டும் எதிர் வரும் தேர்தல் ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல் என உள்ளது.
டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி குறையும் போது ஏன் பொருட்களின் விலை குறைவதில்லை அரிசிக்கான நிர்ணய விலையை வகுத்து மக்களை காப்பாற்றுங்கள் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர் வயோதிபத் தாய் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது திருகோணமலை நகர் பகுதியில் இது தொடர்பான துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டு வாசகங்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறாக பல போராட்டங்கள் நடை பெற்றுள்ளன எது எவ்வாறாக இருந்தாலும் அபிவிருத்தி என்ற போர்வையில் பாமர மக்கள் பாதிக்கப்படக் கூடாது .துறை முக அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் என கப்பல் துறை பகுதியில் பல காணிகளில் மக்களுடைய தனியார் காணிக்குள் பெயர் பலகை போடப்பட்டுள்ளது இது தொடர்பில் அங்கு அடிக்கடி துறை முக அதிகார சபை ஊழியர்கள் செல்கிறார்கள் இதன் மூலம் மக்களுக்கு அச்ச நிலை ஏற்படுகிறது.
திருகோணமலை நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை அண்மையில் நடாத்தினர்
இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பிரதேசத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர் .
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற உள்ள அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் திருகோணமலை நகரில் உள்ள சில பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் முகமாக பிரதானமாக உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மேலும் பொதுமக்களுக்கு இவ் உணவு தவிர்ப்பு போராட்டத்தை விளக்கப்படுத்தும் நோக்கமாகவும் நகரில் உள்ள பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க அல்லது தடுக்கும் முகமாக அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது குறித்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.எமது வளங்களை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் இதனை ஏற்க முடியாது மக்களின் சொத்துக்களை வளங்களை சூறையாட முனைகின்றனர் இதனை நிறுத்த வேண்டும் . நாட்டின் முக்கிய வளங்களான துறை முகங்கள் விமான நிலையம் போன்றன தாரை வார்க்கப்படுகிறது திருகோணமலையில் முக்கிய கரையோர பிரதேசம் தொடக்கம் கப்பல் துறை வரையான பகுதி அபகரிக்கப்படுகிறது இதனை நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் .இலங்கை நாடு சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது இதற்கு எதிராக போராடியவர்களை கைது செய்துள்ளனர் மக்களுக்கு எதிரான ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து மக்களை அடக்கி ஒடுக்க முனைகின்றனர் என்றார்.
எனவே தான் கிழக்கிலங்கையின் முக்கிய ஒரு நகரமாக திருகோணமலை காணப்படுகிறது பல சுற்றுலா தளங்களையும் இயற்கையாக கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அபிவிருத்திகள் இடம் பெறவேண்டும் அபிவிருத்திக்காக மக்களுடைய தனியார் காணிகளை பெற அரசாங்கம் முயற்சிக்க கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.