பேச்சுக்களின் விளைவுகள் என்ன? விதுரன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அறிவித்த பரஸ்பர வரிகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு ‘ஒத்திவைப்பு’ அறிவிப்பைச் செய்யமாட்டார் என்று அமெரிக்காவின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக, திடீ ரென்று ஜனாதிபதி ட்ரம்ப் உலக நாடுகளுக்கான பரஸ்பர வரிகளை அறிவித்திருந்தார். அதன்பின்னர் பல நாடுகளும் அவரிடத்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்புவதாக அறிவித்தன. இதனால், உலக நாடுகள் தன்னிடத்தில் இரஞ்சுகின்றன என்று கேலியாகக் கூறி 90 நாட்களுக்கு பரஸ்பர வரி அமுலாக்கத்தினை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார்.
குறித்த காலப்பகுதிக்குள் உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக சமநிலையை உறுதிப்
படுத்துவதற்கான பேச்சுக்களை நடத்தி உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார் ஜனாதிபதி ட்ரம்ப்.
இலங்கையைப் பொறுத்தவரையில், ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பு செயற்பாட்டுக்கு வருமாக இருந்தால், 44சதவீதமான வரியை ஏற்றுமதிப் பொருட்களுக்காகச் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம்  வரி அறவிடப்படும் என்றும் அறிவித்திருந் தார்.
இதனால், அமெரிக்கச் சந்தைக்குச் செல் லும் அனைத்து இலங்கைப் பொருட்களுக்கும் (10-44) 54சதவீதமான வரியைச் செலுத்த வேண்டிய நிலைமையொன்று தோற்றம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அமெரிக்காவின் பரஸ்பர வரி விடயத்தினை கையாள்வதற்காக குழுவொன்றை நியமித்திருந் தார். இந்தக்குழுவின் திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்சண சூரியப்பெரும உள்ளிட்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தக்குழுவினர் அமெரிக்காவுக்கு இரு தடவைகள் சென்று பேச்சுக்களை முன்னெடுத்தனர். அந்தப் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
ஆனால் அமெரிக்காவுடன் நடத்தப்பட்டப் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக மட்டும் அர சாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், வர்த்தக பொருட்கள்,நேரடி முதலீட்டுக் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் கலந்துரை யாடல்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அமெரிக்க முகவர் அலுவலகமே கையாள்கின்றது.
இதன் தலைமைப்பதவியில் இருப்பவர் தூதுவர் ஜேமிசன் கிரீயர். இவருடன் தான் இலங்கையின் தூதுக்குழுவினர் முதலில் பேச்சுக்களை நடத்தினர்.
அதன்பின்னர், ஜேமிசன் கிரீயர் தனது எக்ஸ் தளத்தில் இலங்கைத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு தொடர்பில் ‘இரு நாடுகளுக்கும் இடை யில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கையுள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்த பேச்சுவார்த்தைகள் தூதுவர் கிரீயரினால் நியமிக்கப்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான தூதுக்குழுவுடனும்,  தெற்காசியா விற்கு பொறுப்பான பணிப்பாளர் எமிலி ஏஷ்பி தலைமையிலான குழுவினருடனும் தான் நடத்தப் பட்டது.
இலங்கையைப் போன்று, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறான பேச்சுக்களில் பங்கேற்றிருந்தன. ஆனால் அப்பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இலங்கை தனது பேச்சுவார்த்தைகள் குறித்து உத்தியோக பூர்வமாக எந்தவிதமான அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை. மிகமிக இரகசியமாகவே அனைத்தையும் பேணிவந்தது. இவ்வாறான நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக,  பரஸ்பர வரிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் வியட்நாமுடன் இணக்கப்பாட்டை எட்டியிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில,  வியட்நாமின் பொருட்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலதிக அறிவிப் பையும் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விடயத்தில் வியட்நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீளாய்வு இணக் கப்பாடு வெற்றியளித்துள்ளமை அந்நாட்டுக்கு மிக முக்கிய மைல்கல்.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை யில் இந்த விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். நாட்டின் ஒட்டுமொத்த பொரு ளாதாரத்தினையே ஆட்டம் காணச்செய்யும் நிகழ்வாகும். ஏனென்றால், இலங்கைக்கும் அமெரிக் காவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமநிலை இல்லை. அதாவது,  2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, மொத்த பொருட்களின் வர்த்தகம் 3.4 பில்லியன் டொலர்களாகும்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து, இலங்கை,  368.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய் திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு, இலங்கையிலிருந்து அமெரிக்கா,  இறக்குமதி செய்த பொருட்களின் பெறுமதி, 3 பில்லியன் டொலர்களாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி, 2024 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. இவ்வாறு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமமற்ற நிலை காணப்படுவதே,  இலங்கைக்கு ட்ரம்ப் 44 சதவீத வரியை விதிப்பதற்கு காரணமாகியது.
ஜனாதிபதி ட்ரம்பின் குறித்த பரஸ்பர வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான சமநிலையற்ற நிலை முழுமையாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது குறைக்கப்பட வேண்டும்.
இன்னமும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கும், இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாதுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவுடன் பரஸ்பர வரி தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கலாநிதி.ஹர்ஷ டிசில்வா, கயந்த கருணாதிலக்க உள்ளிட்டவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த, தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னான்டோ, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே  ஆசிய நாடு இலங்கை தான் என்று கூறியதோடு ஆசியாவில் இலங்கையுடன் தான் அமெரிக்கா பரஸ்பர வரிகள் குறித்து முதல் முறையாக பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆசியாவில் இலங்கையுடன் மட்டும் அமெரிக்கா பேச்சு நடத்தவில்லை. இலங்கையுடன் மட்டும் வர்த்தகத்தை நடத்தவில்லை. பலநாடுகளுடன் அமெரிக்கா பேச்சுக் களை நடத்தியுள்ளது. வியட்நாமுடன் இணக்கப் பாட்டையும் அமெரிக்கா ஏற்படுத்தி விட்டது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி அமுலாக்கம் செய்யப்படுவதற்கு சொற்ப நாட்களே இருக் கையில்  பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர் னான்டோ உள்ளிட்ட ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கருத்துக்கள் வேடிக்கையாக அமைந்திருக்கின்றன.
அதனையும் விடவும், வியட்நாமுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இணக்கப்பாடா னது, இலங்கையில் வெகுவான தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், வியட்நாமைப் பொறுத்த
வரையில், இலங்கையில் ஆடை ஏற்றுமதித் துறைக்கு,  ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந் தைகளில் கடும் போட்டியை கொடுக்கின்ற நாடுக ளில் ஒன்றாகவுள்ளது.
அதனடிப்படையில், வியட்நாமுக்கு குறைந்தளவு வரி விதிக்கப்படுகின்ற நிலையில் அந்த நாடு குறைந்த செலவுடன்  அமெரிக்காவில் பொருட்களை சந்தைப்படுத்த முடியும். அவ்விதமான நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறையின் நிலை மையானது அந்தோ பரிதாபமாகவே போய்விடும். அது உள்நாட்டு பொருளாதாரத்தினை வெகுவாகப் பாதிக்கும்.
குறிப்பாக, ஜனாதிபதி ட்ரம்ப் அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்திலும் பரஸ்பர வரி அமூலாக்கத்தை குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே அவர் இவ்விடயத்தினை கைவிடப் போவதில்லை.
ஆகவே இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்து, 25 30 தீர்வை வரியை செலுத்தி னாலும் அது நாட்டுக்கு பெரும் சிக்கலாக அமையும்.
நாட்டின் வர்த்தகங்களின் இலாபத்தின் அடிப்படையில் நோக்கினால் இவ்வாறான தீர்வை வரியினூடாக இலாபத்தை உழைக்க முடியாது. அது நட்டத்தையே ஏற்படுத்தும். தீர்வை வரி அதிகரிக்க அதிகரிக்க நுகர் வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும். இதன் தாக்கத்தால் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகக்கூடும்.
நாட்டின் மீள்செலுத்துகை பிரிவுக்கு பெரும் சுமை ஏற்படும். நாம் செலுத்த வேண்டி யுள்ள நிதி மற்றும் கிடைக்கவுள்ள நிதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும். வருவாய் குறைவடைந்து கடன் அதிகரிக்கும்.
முதற்கட்டமாக இலங்கை 300 பில்லியன் டொலர்களை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக எங்கிருந்து நிதி திரட்டினாலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்.இந்த நெருக்கடியின் காரணமாக ரூபாவின் பெறுமதி தற்போதே வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2028ஆம் ஆண்டு மீள செலுத்த வேண்டியுள்ள கடன் இலக்கின் அடிப்படையில் நாம் தற்போதிலிருந்தே செயலாற்ற வேண்டும். கடந்த வருடத்தில் 05 சதவீத வருமான வளர்ச்சியை ஏற்படுத்தப்பட்டுள்ளபோதும் தற்போதுள்ள இந்த நெருக்கடியால் வருமான வளர்ச்சியும் வீழ்ச்சியை சந்திக்கலாம். இதனூடாக இலங்கைக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். இந்தப் புரிதல் அரசாங்கத்துக்கு இன்னமும் ஏற்படவில்லையா?