புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த அரசாங்கம் நாடகமாடுவதாக ராஜித சேனாரத்ன சாடல்

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள்  தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
கருணா மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது.
ஆணையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களை சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர்.

இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணாவே மேற்கொண்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணாவின் மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை புலிகள் இழந்தனர்.  கருணா இருந்திருந்தால் இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது.

இந்திய இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலயையும் கைப்பற்ற முடிந்தது.

அது மாத்திரமின்றி கிழக்கு மாகாணம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே ஆயுத பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அவ்வாறிருக்கையில் அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அது நியாயமற்றது.

வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கருணா மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும்.

இதனை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.