பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்துப் போரட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (21) சனிக்கிழமை வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டு வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு வரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (21) வடமராட்சியில் பருத்தித்துறை, நெல்லியடி நகரங்களில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் ஆர்வத்துடன் கையொப்பங்களை இட்டு வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





