பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பான முன்னேற்றம் எதிர்வரும் காலங்களில் பொலிஸாரினால் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகுவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.
சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவை தொடர்பில் விசாரிக்கப்படுகிறது. அதன்பிரகாரம் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை பேணியுள்ளனர் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்று இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர், குறித்த தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும் போது அந்த வலையமைப்பு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள்; முன்னெடுக்கப்படுகின்றன.
சிறையில் இருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.