பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் ரோஹித்த போகொல்லாகம தகவல்

பிரிட்டன்வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 29 அன்று சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகளை கத்தியால் தாக்கி, கொலை செய்த நபர்   படகு மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதி’ என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதையடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.

இந்த நிலையில், பிரிட்டன் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை பிரிட்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம, அவர்களுடன் பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலைவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அத்தோடு பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பிரிட்டனினில் பல்லின, பல்கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்வதாகவும், அவர்கள் கடந்த பல வருடகாலமாக பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்குப் பங்களிப்புச்செய்துவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ரோஹித்த போகொல்லாகம, இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையில் நீண்டகாலமாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் நன்மதிப்பின் அடிப்படையிலான நல்லுறவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 0044 7475206220/ 020 7262 1841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.